அரக்க வீரர்களின்வருகை கண்டு அனுமன் மகிழ்தல்.

5508.

வயிர்ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி முரசு
                       ஒலி, மண்பால்
உயிர் உலைவுறநிமிரும் போர் உறும் ஒலி, செவியின்
                       உணர்ந்தான்;
வெயில் விரிகதிரவனும் போய் வெருவிட,
                      வெளியிடை, விண் தோய்
கயிலையின்மலைஎன நின்றான்; அனையவர் வரு
                       தொழில் கண்டான்.

     வெயில் விரிகதிரவனும் போய் வெரு விட - வெயிலை வீசுகின்ற
சூரியனும் அஞ்சி விலகிப் போய்விட; விண் தோய் கயிலையின் மலை என
-
ஆகாயத்தை எட்டிய கயிலை மலை போல; வெளியிடை நின்றான் -
திறந்த வெளியிடத்தி்ல் நின்றவனாகிய அனுமன்; வயிர் ஒலி வளை ஒலி -
ஊது கொம்பின் ஓசையும் சங்கின் ஓசையும்; வல் கார் மழை ஒலி - வலிய
கார் காலத்து மேக ஒலி போன்ற; முரசு ஒலி - முரசங்களின் முழக்கமும்;
மண்பால் உயிர் -
பூமியில் உள்ள பிராணிகள்; உலை வுற - நடுக்கம்
அடைய; நிமிரும் போர் உறும் ஒலி - ஓங்கும் போர் வருவதைக் குறிக்கும்
ஒலியும்; செவியின் உணர்ந்தான் - காதினால் கேட்டு உணர்ந்தவனாகி;
அனையவர் வரு தொழில் கண்டான் -
அந்த அரக்கர் வருவதைக்
கண்ணால் நேரிலும் கண்டான்.                     

     வெயில் விரி கதிரவன்வெருவியது; அனுமன் சிறு குழந்தையாக இருந்த
போது, தன்னைப் பற்ற வந்ததை எண்ணி மீண்டும் வருவானோ என்ற
நினைவு.                                               (20)