5512.

அறவனும்அதனை அறிந்தான்; அருகினில் அழகின்
                             அமைந்தார்
இற இனின் உதவுநெடுந் தார் உயர் மரம் ஒரு கை
                             இயைந்தான்;

உற வரு துணைஎன அன்றோ, உதவிய அதனை
                                உவந்தான்;
நிறை கடல்கடையும் நெடுந் தாள் மலை என,
                         நடுவண் நிமிர்ந்தான்.

     அறவனும் -அறவடிவினனான அந்த அனுமனும்; அதனை
அறிந்தான் -
அரக்கர்கள் நெருங்கி வந்து படைகள் வீசுவதை அறிந்து;
அருகினில் அழகின் அமைந்தார் -
தனது பக்கத்தில் சிறப்பாக வந்து
பொருந்திய அரக்கர்கள்; இற, இனின் உதவு நெடுந்தார் உயர் மரம் ஒரு
கை இயைந்தான் -
இறப்பதற்கு, இனிமையாக உதவக் கூடிய நீண்ட
ஒழுங்கான மேன்மையுற்ற மரம் ஒன்றைத் தனது கையில் எடுத்தான்; உற வரு
துணை என அன்றோ -
மனத்திற்கு ஏற்ப உதவி செய்ய வருகின்ற ஒரு
துணைவனைப் போல அல்லவா இது உள்ளது என்று; உதவிய அதனை
உவந்தான் -
தக்க சமயத்தில் உதவுமாறு கிடைத்த அம்மரத்தை விரும்பிக்
கொண்டவனாய்; நிறை கடல் கடையும் நெடுந்தாள் மலை என நடுவண்
நிமிர்ந்தான் -
பால் நிறைந்த கடலைக் கடைதற்குரிய பெரிய அடியை உடையமந்தர மலையைப் போல அரக்கர் நடுவில் ஓங்கி எழுந்தான்.

     அரக்கர் கடலைக்கலக்கப் போவதால் மந்தர மலை அனுமனுக்கு
உவமை ஆயிற்று.                                          (24)