5514. | பறை புரைவிழிகள் பறிந்தார்; படியிடை நெடிது படிந்தார்; பிறை புரை எயிறும் இழந்தார்;பிடரொடு தலைகள் பிளந்தார்; குறை உயிர் சிதறநெரிந்தார்; குடரொடு குருதி குழைந்தார்;- முறை முறை படைகள்எறிந்தார்-முடை உடல் மறிய முறிந்தார். |
முறை முறை படைகள்எறிந்தார் - (அவ்வரக்கர்கள்)வரிசை வரிசையாக நின்று (அனுமன் மேல்) ஆயுதங்களை வீசினர்; பறை புரை விழிகள் பறிந்தார் - (அனுமன் மரங்கொண்டுதாக்கியதனால்) அவர்களில் சிலர் தோற்பறை போன்று அகன்ற கண்கள் பறிக்கப்பட்டவராயினர்; படியிடை நெடிது படிந்தார் - சிலர், தரையின் மீது நீள விழுவாராயினர்; பிறை புரை எயிறும் இழந்தார் - பிறைச்சந்திரன் போன்று வளைந்த தமது பற்களை இழந்தவராயினர் சிலர்; பிடரொடு தலைகள் பிளந்தார் - சிலர், பின் கழுத்தும் தலைகளும் பிளக்கப்பட்டவராயினர்; குறை உயிர் சிதற நெரிந்தார் - சிலர், தமது குற்றுயிரும் சிதறிப் போகும்படி மிதிபட்டு அழிந்தார்; குடரொடு குருதி குழைந்தார் - சிலர் தமது குடலோடு இரத்தத்தையும் வெளியே சொரிந்து அழிந்தனர்; முடை உடல் மறிய முறிந்தார் - சிலர் முடை நாற்றமுள்ள தமது உடம்புகள் அழியும்படி முறியப் பெற்றார்கள். வட்டமாயும்பெரியவையாயும் இருத்தலால் தோற்பறை அரக்கர் கண்களுக்கு உவமை. (26) |