5533.

ஊன் எலாம்உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து
                                உலந்தான்;-
தான்,எலாரையும், மாருதி சாடுகை தவிரான்;-
மீன் எலாம்உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
வான் எலாம்உயிர்; மற்றும் எலாம் உயிர்-சுற்றி.

     மாருதி தான்எலாரையும் சாடுகை தவிரான் - அனுமன் தான்
ஒருத்தனாகவே, எதிர்ப்பட்ட அரக்கர் யாவரையும் கொல்லுதலினின்றும்
நீங்கானல்லன்; (அதனால்) ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து
உலந்தான் -
உடம்புகளிலிருந்து உயிர்களைக் கவர்ந்து செல்ல வேண்டிய
எமன் (மாள்பவர் பலராகி விட்டதால், தனது தொழிலைச் செய்ய
இயலாதவனாய்) தளர்ந்து வலிமை கெட்டான்; சுற்றி - (எடுத்துக் கொண்டு
போவார் எவரும் இன்மையின் அவ்வரக்கர் உயிர்) எங்கும் சுழன்று; மீன்
எலாம் உயிர் -
நட்சத்திர மண்டலம் முழுவதும் உயிராகவும்; மேகம் எலாம்
உயிர் -
மேகமண்டலங்களில் எல்லாம் உயிராகவும்; மேல் மேல் வான்
எலாம் உயிர் -
மற்றும் உள்ள இடைவெளிகளில் எல்லாம் உயிராகவும்
நிரம்பிக் கிடந்தன.

     முன் கவிதையில்உடல்கள், இக் கவிதையில் உயிர்கள் சிதறியமை
கூறப்பட்டன.                                             (45)