அரக்கர்கள்நடுவில் அனுமன் காட்சி

5534.

ஆக இச்செரு விளைவுறும் அமைதியின், அரக்கர்
மோகம் உற்றனர்ஆம் என, முறை முறை முனிந்தார்;
மாகம் முற்றவும்,மாதிரம் முற்றவும், வளைந்தார்,
மேகம்ஒத்தனர்-மாருதி வெய்யவன் ஒத்தான்.

     ஆக இச்செருவிளைவுறும் அமைதியில் - இவ்வாறு, இப்போர்
நடக்கும் சமயத்தில்; அரக்கர் மோகம் உற்றனர் ஆம் என - சில
அரக்கர்கள் அறிவு மயக்கம் கொண்டவர்கள் போல; முறை முறை
முனிந்தார் -
மேன் மேலும் கோபம் கொண்டவர்களாகி; மாகம் முற்றவும் -
வானிடம் முழுவதும்; மாதிரம் முற்றவும் வளைந்தார் - திக்குகள் முழுவதும்
சூழ்ந்து கொண்டவராய்; மேகம் ஒத்தனர் - கரிய மேகம் போல விளங்கினர்;
மாருதி வெய்யவன் ஒத்தான் -
அனுமன் சூரியனைப் போன்று
விளங்கினான்.

     பலபடியாகச்சிதறுண்டு போன அரக்கர்கள், இச்சமயத்தில் சினம்
கொண்டு சூழ்வது அவர்களது அறிவின்மையின் செயல். இதை 'மோகம்
உற்றனர்' என்ற தொடர்காட்டுகிறது. மாகம் - வான்; மாதிரம் - திக்கு. (திசை)
                                                     (46)