5535. | அடல்அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலி்ன் அயரப் புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின் பொலிவின் மிடல் அயில்படை மீன் என விலங்கலின், கலங்கும் கடல்நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான். |
அடல் அரக்கரும்- வலிமைமிக்க அந்த அரக்கர்களும்; ஆர்த்தலின், அலைத்தலின் - இரைதலாலும்; (அனுமனால் இங்கும் அங்கும்) அலைக்கப்படுவதாலும்; அயர புடை பெருத்து உயர் பெருமையின் - (கண்டவர்) சோரும்படி பக்கங்கள் பருத்து உயர்ந்து தோன்றுகின்ற பெருந்தோற்றத்தாலும்; கருமையின் பொலிவின் - கருநிறத்தாலும், மிகுதியாய் (நிறைந்து) காணப்படுவதாலும்; மிடல் அயில்படை மீன் என விலங்கலின் - அவர்கள் கொண்டுள்ள வலிய வேல்படைகள் மீன்கள் போன்று விளங்குவதனாலும்; கலங்கும் கடல் நிகர்த்தனர் - (கடையும் போது) கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பாக விளங்கினர்; மாருதி மந்தரம் கடுத்தான் - அனுமன், (கடலைக்கலக்கும்) மந்தரமலையை ஒத்தான். ஆர்த்தல்,அலைதல், பெருந் தோற்றம், கருமை, மீன் விலங்குதல் அரக்கர்க்கும் கடலுக்கும் பொருந்தும் பொதுத்தன்மைகள். (47) |