5536. | கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ, நிரை மணித் தலைநெரிந்து உக, சாய்ந்து உயிர் நீப்பார், சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள், தொடரும் உரகர் ஒத்தனர்- அனுமனும் கலுழனே ஒத்தான். |
கரதலத்தினும்,காலினும் வாலினும் கதுவ - அனுமன் தனது கைகளாலும், கால்களாலும், வாலினாலும் பற்றுதலினால்; நிரைமணித்தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் - வரிசையாகக் கரிய நிறமுள்ள தமது தலைகள் நசுங்கிச் சிதறுதலினால் மண்மீது விழுந்து உயிர்விடுகின்ற கிங்கரர்கள்; சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள் - தேவர்கள் அஞ்சும்படி, அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பும் பொழுது; தொடரும் உரகர் ஒத்தனர் - (காவலிருந்து கவர வொட்டாது தடுக்கத்) தொடர்ந்த பாம்புகளை ஒத்தனர்; அனுமனும் கலுழனே ஒத்தான் - அனுமனும், (அமுதத்தோடு எழுந்த) கருடனை ஒத்திருந்தான். (48) |