5537.மானம்உற்ற தம் பகையினால், முனிவுற்று வளைந்த
மீனுடைக் கடல்உலகினின், உள எலாம் மிடைந்த
ஊன் அறக்கொன்று துகைக்கவும், ஒழிவு இலா
                                     நிருதர்
ஆனைஒத்தனர்-ஆள் அரி ஒத்தனன் அனுமன்.

     மானம் உற்ற தம்பகையினால் முனிவுற்று வளைந்த - செருக்குக்
கொண்ட தமது பகைமைக் குணத்தினாலே, கோபம் கொண்டு (அனுமனைச்)
சூழ்ந்து கொண்டவரும்; மீன் உடைக்கடல் உலகினின் உள எலாம்
மிடைந்து -
மீன்களை உடைய கடலினால் சூழப்பட்ட இலங்கையிலே உள்ள
இடம் முழுவதும் நெருங்கியிருப்பவரும்; ஊன் அற கொன்று துகைக்கவும்
ஒழிவு இலா நிருதர் -
(கண்ணில் கண்டவர்) உடம்புகளை எல்லாம் அழித்
தொழிக்கவும் அழிந்திடாமல் பெருகித் தோன்றுபவருமான அரக்கர்கள்;
ஆனை ஒத்தனர் -
யானைகளைப் போன்றவரானார்கள்; அனுமன் ஆள்
அரி ஒத்தான் -
அனுமன் (மிருகங்களை) ஆளும் தன்மை உள்ள சிங்கத்தை
ஒத்தவனானான்.

    அரக்கர்களுக்குயானைத் திரளும், அனுமனுக்கு, சிங்கமும்
உவமைகளாக வந்தன.                                         (49)