5540.

மேவும் வெஞ் சினத்து அரக்கர்கள், முறை முறை,
                                  விசையால்
ஏவும் பல் படை,எத்தனை கோடிகள் எனினும்,
தூவும் தேவரும், மகளிரும், முனிவரும் சொரிந்த
பூவும், புண்களும்,தெரிந்தில, மாருதி புயத்தில்.

     மேவும் வெம்சினத்து அரக்கர்கள் - போருக்கு வந்த கொடிய
கோபம் கொண்ட அரக்கர்கள்; முறை முறை விசையால் ஏவும் பல்படை -
பல தடவை விசையுடன் தூண்டிய பல்வகை ஆயுதங்கள்; எத்தனை
கோடிகள் எனினும் -
மிகப் பலகோடிகளானாலும்; புண்களும் - அவற்றால்
உண்டாகின்ற புண்களும்; தூவும் தேவரும் - இன்பத்தையே அனுபவிக்கின்ற
தேவர்களும்; மகளிரும் முனிவரும் சொரிந்த பூவும் - அவரது
மனைவிமார்களும் தேவ ரிஷிகளும் ஆகாயத்திலிருந்து பொழிந்த மலர்களும்;
மாருதி புயத்தில் தெரிந்தில -
அனுமனது தோளில் வேற்றுமை தெரியாதபடி
ஒரு சேர விளங்கின.

    காண்பவர்களுக்குப் புண்களின் வடுக்களும் மலர்களும் வேற்றுமை
தெரிந்தில. அனுமனுக்கு அமரர்கள் தூவிய பூக்களைப் போலவே, அரக்கர்கள்
விட்ட படைகளால் ஏற்பட்ட புண்ணும் ஊறு செய்தில என்பதாம்.     (52)