5542.

எஞ்சல்இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ,
நஞ்சம்உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்;
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும்
                             தொலைவுற்று,
எஞ்சினார்இல்லை; அரக்கரின் வீரர் மற்று யாரே ?

     இராவணன் ஏவ -இராவணன்கட்டளை இட்டு அனுப்ப; நஞ்சம்
உண்டவராம் என அனுமன் மேல் நடந்தார் -
விடத்தை அருந்தியவர்கள்
போன்று அனுமன் மீது போருக்குச் சென்ற அந்த அரக்கர்களின்; எஞ்சல்
இல் கணக்கு அறிந்திலம் -
குறைவு படாத கணக்கு இவ்வளவு என்று யாம்
அறிந்தோம் இல்லை; யாவரும் துஞ்சினார் அல்லது - (ஆனால்) எல்லா
அரக்கரும் (எதிர்த்துப் போர் செய்து) இறந்தார்களே அல்லாமல்; மறத்தொடும்தொலைவுற்று எஞ்சினார் இல்லை - வீரத்தில் குறைந்து
தோற்றமையால்எஞ்சியவர்கள் எவரும் இல்லை; அரக்கரில் வீரர்
மற்றுயாரே ? -
(ஆதலால்) அந்த அரக்கர்களைப் போலச் சிறந்த போர்
வீரர்கள் வேறு யாரேஉளர் ? (ஒருவரும் இல்லை).

     அனுமன் மீதுபோருக்குச் சென்ற அரக்கர்களின் வீரத்தைக் கவிஞர்
பாராட்டுவதாக அமைந்தது இக்கவிதை.                         (54)