5548.

மீட்டுஅவர் உரைத்திலர்;பயத்தின் விம்முவார்;
தோட்டு அலர் இனமலர்த் தொங்கல் மோலியான்,
'வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை,
கேட்டதோ ?கண்டதோ ? கிளத்துவீர்' என்றான்.

     அவர் மீட்டுஉரைத்திலர் - அந்த வனத்து நாயகர்,மறுமொழி
கூறாதவர்களாய்; பயத்தின் விம்முவார் - அச்சத்தினால்
நடுங்குபவரானார்கள்; தோடு அலர் இனம் மலர் தொங்கல் மோலியான் -
இதழ்களோடு விரிந்த பலவகை மலர்களால் தொடுத்த மாலையணிந்த முடிகளை
உடைய இராவணன்; அரக்கரை வீட்டியது என்னும் வெவ் உரை - (அந்தக்
குரங்கு) அரக்க வீரரைக் கொன்று விட்டது என்ற கொடிய வார்த்தை;
கேட்டதோ ? கண்டதோ ? கிளத்துவீர் என்றான் - நீங்கள் கேட்டுச்
சொன்னதா ? அன்றி, பார்த்துச் சொன்னதா ? சொல்லுங்கள் என்று மீட்டும்
கேட்டான்.                                              (60)