சம்புமாலிபோருக்குப் புறப்படுதல் 5551. | ஆயவன்வணங்கி, 'ஐய ! அளப்பரும் அரக்கர் முன்னர், "நீஇது முடித்தி"என்று நேர்ந்தனை; நினைவின் எண்ணி ஏயினை;என்னப்பெற்றால், என்னின் யார் உயர்ந்தார் ?' என்னா, போயினன்,இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான். |
ஆயவன் வணங்கி -அந்தச்சம்புமாலி என்பவன் இராவணனை வணங்கி; ஐய ! - தலைவனே; அளப்பு அரும் அரக்கர் முன்னர் - அளவிடுதற்கு அரிய அரக்கர் கூட்டத்திடையே; நினைவின் எண்ணி - மனத்தில் ஆலோசித்துப் பார்த்து; நேர்ந்தனை - நான் சொல்லுவதற்கு இசைந்து; நீ இது முடித்தி என்று ஏயினை - (அவர்களை ஏவாமல் என்னை நோக்கி) நீ இக்காரியத்தைச் செய்து முடிப்பாயாக என்று ஆணையிட்டாய்; என்னப் பெற்றால் - என்னும் பெருமையை யான் அடையப் பெற்றேன் என்றால்; என்னின் உயர்ந்தார் - என்னைவிட உயர்ந்தவர்; யார் என்னா - வேறு யார் உளர் என்று சொல்லி; இலங்கை வேந்தன் போர்ச்சினம் போவது ஒப்பான் போயினன் - இலங்கை அரசனான இராவணனது, போரில்மூண்டு எழும் கோபமே, ஒரு உருவெடுத்துப் போவது போன்று சென்றான். 'மாருதி அல்லனாகில் நீயெனும் மாற்றம் பெற்றேன்; ஆர் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான்' (6986) என்னும் பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. விரைவுக்கு இராவணன் கொள்ளும் போர்ச்சினம் உவமை; புதுமை சான்ற கற்பனை. (2) |