சம்புமாலிபோருக்குப் புறப்படுதல் 

 5551.

ஆயவன்வணங்கி, 'ஐய ! அளப்பரும் அரக்கர்
                            முன்னர்,
"நீஇது முடித்தி"என்று நேர்ந்தனை; நினைவின்
                           எண்ணி
ஏயினை;என்னப்பெற்றால், என்னின் யார்
                    உயர்ந்தார் ?' என்னா,
போயினன்,இலங்கை வேந்தன் போர்ச் சினம்
                    போவது ஒப்பான்.

     ஆயவன் வணங்கி -அந்தச்சம்புமாலி என்பவன் இராவணனை
வணங்கி; ஐய ! - தலைவனே; அளப்பு அரும் அரக்கர் முன்னர் -
அளவிடுதற்கு அரிய அரக்கர் கூட்டத்திடையே; நினைவின் எண்ணி -
மனத்தில் ஆலோசித்துப் பார்த்து; நேர்ந்தனை - நான் சொல்லுவதற்கு
இசைந்து; நீ இது முடித்தி என்று ஏயினை - (அவர்களை ஏவாமல் என்னை
நோக்கி) நீ இக்காரியத்தைச் செய்து முடிப்பாயாக என்று ஆணையிட்டாய்;
என்னப் பெற்றால் -
என்னும் பெருமையை யான் அடையப் பெற்றேன்
என்றால்; என்னின் உயர்ந்தார் - என்னைவிட உயர்ந்தவர்; யார் என்னா -
வேறு யார் உளர் என்று சொல்லி; இலங்கை வேந்தன் போர்ச்சினம்
போவது ஒப்பான் போயினன் -
இலங்கை அரசனான இராவணனது, போரில்மூண்டு எழும் கோபமே, ஒரு உருவெடுத்துப் போவது போன்று
சென்றான்.

    'மாருதி அல்லனாகில் நீயெனும் மாற்றம் பெற்றேன்; ஆர் இனி
என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான்' (6986) என்னும் பகுதி இங்கு
ஒப்பு நோக்கத்தக்கது. விரைவுக்கு இராவணன் கொள்ளும் போர்ச்சினம்
உவமை; புதுமை சான்ற கற்பனை.                              (2)