5558. | மின் நகுகிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற, தொல் நகர்பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம் என்ன- அன்னவன் சேனைசெல்ல, ஆர்கலி இலங்கை ஆய பொன் நகர்தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப. |
அன்னவன்சேனை செல்ல - அந்தச் சம்புமாலியினது படைகள் செல்வதால்; ஆர்கலி இலங்கை - கடலால் சூழப்பட்ட இலங்கை; ஆய பொன் நகர் - என்ற பொன்னால் அமைந்த நகரமானது; தகர்ந்து, பொங்கி, - உடை பட்டு, மிகவும் நிறைந்து; ஆர்த்து எழு தூளி போர்ப்ப - கிளம்புகின்ற புழுதி, (தம் மீது) படிதலால்; மின் நகு கிரிகள் யாவும் - ஒளி விளங்குகின்ற சாதாரண மலைகளெல்லாம்; மேருவின் விளங்கி தோன்ற - பொன்மயமான மேரு மலை போலப் பேரொளி கொண்டு விளங்க; தொல் நகர், பிறவும் எல்லாம் - பழைய அந்த இலங்கை நகரும் மற்றைய நகரங்களும்; துறக்கம் என்னப் பொலிந்தன - பொன்னுலகமான சுவர்க்கலோகம் போல விளங்கின. நகுதல் -விளங்குதல். உரும் ஒத்த' என்ற பாடல் முதல் இதுவரை வந்த வினையெச்சங்கள் இச்செய்யுளில் வரும் 'பொலிந்தன' என்ற வினைமுற்றைக் கொண்டு முடிந்தன. (9) |