5559.

ஆயிரம்ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்;
                               அத் தேர்க்கு
ஏயின இரட்டியானை; யானையின் இரட்டி பாய் மா;
போயின பதாதி,சொன்ன புரவியின் இரட்டி
                               போலாம்-
தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற
                               சேனை.  

     தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்று எனச் சென்ற சேனை -
கொடியவனான சம்புமாலியினது பெரிய தேரைச் சூழ்ந்து விரைவாகச் சென்ற
அரக்கர் படையில்; ஆழி அம் தடம் தேர் - சக்கரங்களை உடைய அழகிய
பெரிய தேர்கள்; ஐந்தொடு ஐந்து ஆயிரம் ஆம் - பத்தாயிரமாகும்; ஏயின
யானை -
அங்குப் பொருந்திய யானைகளின் அளவு; அத்தேர்க்கு இரட்டி -
அத் தேர்த் தொகைக்கு இரட்டிப் புள்ளதாகும்; (இருபதினாயிரம்) பாய் மா -
பாயும் குதிரைகள்; யானையின் இரட்டி - யானைத் தொகையினும் இரு
மடங்காகும்; (நாற்பதினாயிரம்) போயின பதாதி - சென்ற காலாட் படை;
சொன்ன புரவியின் இரட்டி - கீழே கூறப்பட்ட குதிரைத் தொகையினும் இரு
மடங்காகும் (எண்பதினாயிரம்).                         

     போல், ஆம் -அசைகள். இது சேனையின் தொகுதி கூறியது.
நால்வகைப் படைகளையும் இப்பாடலில் தொகுத்துச் சொல்லிய கவிஞர், இனி
அவற்றைத் தனித்தனியே விவரிப்பார்.                           (10)