சம்புமாலி அணிவகுத்து வருதலும் அனுமன் போருக்குஅமைந்து நிற்றலும் 5569. | ஆண்டுநின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து, அனிகம்தன்னை, மூண்டு இருபுடையும், முன்னும், முறை முறை முடுக ஏவி, தூண்டினன், தானும்திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல், வேண்டியதுஎதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத் திண் தோள். |
அரக்கன் ஆண்டுநின்று - சம்புமாலி அங்கிருந்து; அனிகம் தன்னை-தனது சேனையை; வெவ்வேறு அணி வகுத்து - வெவ்வேறு அணியாகப்பிரித்து; இரு புடையும் முன்னும் முறை மூண்டு முடுக ஏவி - அனுமனதுஇரண்டு பக்கங்களிலும் எதிரிலும் முறைமுறையாக மூண்டு விரையும் படிஆணையிட்டு; தானும் திண் தேர் தூண்டினன் - தானும் தனது வலிய தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்; தோரணத்து இருந்த தோன்றல் - (அப்போது) தோரணத்தின் மீது அமர்ந்திருந்த அனுமன்; வேண்டியது எதிர்ந்தான் என்ன - தான் விரும்பியது தன்முன் எதிர்ப்பட்டது என்று; விசயத் திண்தோள் வீங்கினன் - தனது வெற்றி தரும் வலிய தோள்கள் பூரிக்கப்பெற்றான். சம்புமாலிசேனையை அணி வகுத்துக் கொண்டு தேரில் வருவதைப் பார்த்து, 'நாம் நினைத்தது வந்தது' என்று அனுமன் மகிழ்ந்தான்.அரக்கர் போருக்கு வரவில்லையே என்று எதிர்பார்த்து இருந்ததை 5564 ஆம் செய்யுளில் கூறினார். விசயம் - வெற்றி. (20) |