அரக்கர் படை விடஅனுமன் கடும் போர் செய்தல் 5571. | வயிர்கள்வால் வளைகள் விம்ம, வரி சிலை சிலைப்ப, மாயப் பயிர்கள்ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல்லியம் குமுற, பற்றி- செயிர் கொள்வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர்,- படைகள் சிந்தி, வெயில்கள்போல்ஒளிகள் வீச, வீரன்மேல் கடிது விட்டார். |
செயிர்கொள்வாள் அரக்கர் - பகைமை கொண்டவாளேந்திய அரக்கர்கள்; சீற்றம் செருக்கினர் - சினத்தால் பெருமிதம் கொண்டவர்களாய்; வயிர்கள் வால் வளைகள் விம்ம - கொம்புகளும் வெண்மையான சங்குகளும் முழங்கவும்; வரிசிலை சிலைப்ப - கட்டமைந்த விற்கள் நாணொலியை உண்டாக்கவும்; மாயப் பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப - மாயவினைகளை விளைவிக்கும் பயிர்கள் போன்ற அரக்கர்கள் (மகிழ்ச்சி கொண்டு) ஆரவாரம் செய்யவும்; மூரிப் பல் இயம் குமுற - பெரிய பல வாத்தியங்கள் முழங்கவும்; படைகள் பற்றி - ஆயுதங்களைத் தமது கைகளினால் எடுத்து; வெயில்கள் போல் ஒளிகள் வீச - வெயில்களைப் போலப் பல ஒளிகள் வீசும்படி; வீரன் மேல் கடிது சிந்தி விட்டார் - அனுமன் மீது விரைவாக நாற்புறமும் சிதறும்படி விட்டார்கள். அரக்கர்செருக்கினராய், விம்ம, சிலைப்ப, ஆர்ப்பெடுப்ப, குமுற, படைகள் ஒளி வீச வீரன் மேல் விட்டனர். (22) |