5575.

இழந்தனநெடுங் கொடி; இழந்தன இருங் கோடு;
இழந்தன நெடுங்கரம்; இழந்தன வியன் தாள்;
இழந்தன முழங்குஒலி; இழந்தன மதம் பாடு;
இழந்தன பெருங்கதம்-இருங் கவுள் யானை.

     இருங்கவுள் யானை- (அனுமனால் அடிக்கப்பட்ட) மதம் பெருகும்
கன்னத்தை உடைய யானைகள்; நெடுங் கொடி இழந்தன - (தம் மேல்
பிடிக்கப்பட்ட) பெரிய  கொடிகளை இழந்தன;இருங்கோடு இழந்தன - பெரிய
தந்தங்களை இழந்தன;நெடும் கரம் இழந்தன - பெரிய துதிக்கைகளை
இழந்தன; வியன்தாள்இழந்தன - பெரிய கால்களை இழந்தன; முழங்கு
ஒலி இழந்தன -
வீறிடுகின்ற ஒலியை இழந்தன; மதம் பாடு இழந்தன -
மதம் ஒழுகுதலைஇழந்தன; பெருங் கதம் இழந்தன - பெரிய கோபத்தை
இழந்தன.

    அனுமனால் யானைப்படைகள் அழிந்தமை கூறப்பட்டது. யானையின்
மீது கொடி எடுத்தல் மரபு. கோபத்தைக் காட்ட முடியாதபடி யானைகள்
இறந்தன என்பதை பெருங்கதம் இழந்தன என்று குறித்தார். உயிர்
இருந்தால்தானே உணர்ச்சியைக் காட்ட முடியும் ?                 (26)