5578. | வெருண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்; மருண்டனர்,மயங்கினர், மறிந்தனர், இறந்தார்; உருண்டனர்,உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்; சுருண்டனர்,புரண்டனர், தொலைந்தனர்;- மலைந்தார். |
மலைந்தார் -அனுமனோடுபோர் செய்த அரக்கர்களில் (சிலர்); வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் - அனுமனது திறத்தைக் கண்டு அச்சம் கொண்டு வியந்தவண்ணம் கீழே விழுந்தனர்; எழுந்தார் - விழுந்தவர்களில் சிலர் எழுந்தார்; மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் - மருண்டும் மயங்கியும் குப்புற விழுந்து இறந்தனர்; பிழைத்தார் உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் - (அவ்வாறு இறவாமல்) உயிர் பிழைத்தவர்களில் சிலர் உருண்டு, வருந்தி உடல் துவண்டு; சுருண்டனர் புரண்டனர், தொலைந்தனர் - தமது உறுப்புக்கள் சுருளப் பெற்று, பூமியில் புரண்டு வலிகெட்டு ஓடிவிட்டனர். இது,காலட்படையின் அழிவு கூறியது. (29) |