5583. | வென்றிவெம் புரவியின் வெரிநினும், விரவார் மன்றல் அம்தார் அணி மார்பினும், மணித் தேர் ஒன்றின்நின்றுஒன்றினும், உயர் மத மழை தாழ் குன்றினும்,-கடையுகத்து உரும் எனக் குதித்தான். |
வென்றிவெம்புரவியின் வெரிநினும் - வெற்றியைத் தரத்தக்கவலிய குதிரைகளின் முதுகிலும்; விரவார் மன்றல் அம் தார் அணி மார்பினும் - பகைவர்களான அரக்க வீரர்களது நறுமணம் உள்ள மாலைகள் அணிந்த மார்புகளிடத்தும்; மணித்தேர் ஒன்றின் நின்று ஒன்றினும் - மணிகள் கட்டப்பெற்ற தேர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிலும்; உயர் மத மழை தாழ் குன்றினும் - உயர்ந்தோங்கிய மதமாகிய மழைபொழிகின்ற மலை போன்ற யானைகளிடத்திலும்; கடை யுகத்து - யுக முடிவின் காலத்தில்; உரும் எனக் குதித்தான் - தோன்றும் இடியே போல, (அனுமன்) குதித்து அழித்தான். முன் கவியில்,சொல்லப்பட்டது, இங்கு விரித்துரைக்கப்படுகின்றது. மதமழைதாழ் குன்று - என்ற குறிப்பால் யானை என்பது உணர்த்தப்பட்டது. (34) |