5603.

'உறுவது என்கொலோ ? உரன் அழிவு என்பது ஒன்று
                               உடையார்
பெறுவது யாதுஒன்றும் காண்கிலர், கேட்கிலர்
                               பெயர்ந்தார்;
சிறுமை ஈது ஒப்பதுயாது ? நீ குரங்கின்மேல்
                               செல்லின்,
முறுவல் பூக்கும்அன்றே, நின்ற மூவர்க்கும்
                               முகங்கள் ?

     உறுவது என்கொலோ- நீகுரங்கை எதிர்த்துப் போர்செய்யப்
புகுவதால் உனக்கு வரக்கூடிய நலம் என்ன இருக்கிறது ?; உரன் அழிவு
என்பது ஒன்று உடையார் -
வலிமை அழிவதென்னும் நிலை உடையவர்கள்;
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர், பெயர்ந்தார் - விளைவு
என்ன என்பதைக் காணாதவரையும் அது பற்றி எவரேனும் சொன்னால்
கேளாதவரையும் போனவர்களே ஆவர் என்பர்; சிறுமை ஈது ஒப்பது யாது -
வீரத்தன்மைக்கு இது போன்ற இழிவு வேறொன்று என்ன இருக்கிறது; நீ
குரங்கின்மேல் செல்லின் -
நீ ஒரு குரங்கை எதிர்த்துப் போர் செய்யப்
போவாயாயின்; நின்ற மூவர்க்கும் - உன்னை எதிர்ப்பதை விடுத்து
ஒதுங்கியுள்ள மும்மூர்த்திகளுக்கும்; முகங்கள் முறுவல் பூக்கும் அன்றே -
முகத்தில் புன்சிரிப்புத் தோன்றுமன்றோ ?

    தகுதியால்இழிந்தோரிடம் போர் செய்யப் புகுவது வீரத்துக்கு இழிவு.
ஆகவே, கயிலை மலையையே பெயர்த்தவன் ஒரு குரங்கை எதிர்க்கப் புகுவது
உரன் அழிவே என்று பஞ்சசேனாபதியர் குறித்தனர். உரனுக்கு அழிவு தேட
முற்பட்ே்டார் தாமும் தெளியார், பிறர் சொல்லும் கேளார் என்ற உலகியல்
உண்மையை எடுத்துரைத்தார். இத்தனையையும் மீறிப் போனால்
மும்மூர்த்திகளின் முகத்தில் ஏளனச் சிரிப்புத் தோன்றும்  என்பது பஞ்ச
சேனாபதியர் கருத்து.                                        (3)