பஞ்சசேனாபதிகளின் கட்டளைப்படி படைகள் திரளுதல் 

5605.

உலகம்மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என
                              உயர்ந்தார்,
திலகம் மண் உறவணங்கினர்; கோயிலின் தீர்ந்தார்;
'அலகு இல் தேர்,பரி, கரியொடு ஆள் மிடைந்த
                             போர் அரக்கர்,
தொலைவு இலாதனகதுமென வருக' எனச்
                              சொன்னார்.

     மூன்று உலகிற்கும்முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் -
மூன்றுஉலகங்களுக்கும் தலைமை பெற்றவர் போன்று உயர்ந்தவரான பஞ்ச
சேனாபதிகள்; திலகம் மண் உற வணங்கினர் - தமது நெற்றித்திலகம்
தரையில் படும்படி இராவணனை  நோக்கிக் கீழே விழுந்து வணங்கினார்கள்;
கோயிலின் தீர்ந்தார் - (பிறகு) அரண்மனையை விட்டு வெளி வந்து;
தொலைவு இலாதன - எளிதில் அழிவில்லாதனவாகிய; அலகு இல் தேர்,
பரி கரியொடு -
அளவற்ற தேர்களும் குதிரைகளும், யானைகளும் (என்ற இச்
சேனையோடு); மிடைந்த போர் அரக்கர் - நெருக்கமாக உள்ள போர்
செய்யவல்ல அரக்கவீரர்கள்; கதும் என வருக எனச் சொன்னார் -
விரைவாக வரக்கடவர் என்று கட்டளையிட்டார்கள்.                  (5)