5610.

வழங்குதேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்,
முழங்கு வெங்களிற்று அதிர்ச்சியும், மொய் கழல்
                                    ஒலியும்,
தழங்குபல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி
முழங்கும்ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி.

     வழங்குதேர்களின் இடிப்பொடு - விரைந்து செல்கின்றதேர்களின்
ஒலியும்; வாசியின் ஆர்ப்பும் - குதிரைகளின் கனைப்பு ஒலியும்; முழங்கு
வெம் களிற்று அதிர்ச்சியும் -
பிளிறுகின்ற கொடிய யானைகளின்
பேரொலியும்; மொய் கழல் ஒலியும் - (வீரர்கள் காலில்) கட்டிய
வீரக்கழல்களின் ஒலியும்; தழங்கு பல்லியத்து அமலையும் - ஒலிக்கும்
பலவாத்தியங்களின் பேரொலியும் (கூடி); கடை யுகத்து ஆழி முழங்கும்
ஓதையின் -
யுக முடிவுக் காலத்தில் கடல்கள் கொந்தளித்து ஒலிக்கின்ற
ஓசையை விட; மும் மடங்கு முடுகி எழுந்தது - மூன்று மடங்கு அதிகமாக
விரைந்து மேற்கிளம்பியது.

     ஒலி, தழங்கல்,அமலை, ஓதை என்பன ஒரு பொருள் குறிக்கும் பல
சொற்கள். 'ஆறுபாய் அரவம்', என்ற நாட்டுப் படலப் பாடலில் (கம்ப.34) ஒலி
குறித்துப் பல சொற்கள் ஒரு பொருள் குறித்து வந்தன; ஒப்பிட்டுச் சுவைக்கத்
தக்கன.                                                   (10)