5621. | இந்திரன்இசை இழந்து ஏகுவான், இகல் தந்தி முன்கடாவினன் முடுக, தாம் அதன் மந்தர வால் அடிபிடித்து, 'வல்லையேல் உந்துதி, இனி'என, வலிந்த ஊற்றத்தார். |
இசை இழந்துஏகுவான் இந்திரன் - (இராவணனோடு போர் புரிந்ததால்) தன் புகழ் அழிந்து தோற்றுத் திரும்பிப் போன தேவேந்திரன்; இல்தந்தி முன் கடாவினன் முடுக - வலிமை பொருந்திய (தன் ஐராவதம் என்னும்) யானையை முன்னே (வேகமாகச்) செலுத்திக் கொண்டு செல்ல; தாம் - அவர்கள்; அதன் மந்தர வால் அடிபிடித்து - அந்த யானையினது அழகான வாலின் அடியைப் பிடித்துக் கொண்டு; வல்லையேல் இனி உந்துதி என - நீ வலிமையுள்ளவனானால் இனிமேல் உனது யானையை மேற் செலுத்துவாய்' என்று; வலிந்த ஊற்றத்தார் - பிடித்து இழுத்துத் (தடை செய்த) வலிமை உடையவர்கள். மந்தரம் - அழகு;'மென்மை' என்னும் பொருளும் உண்டு. (21) |