5648. | ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் இழுக்க, தேர்த் துணை ஆழிஅழுந்தினர், சென்றார்; ஆர்த்தனர்;ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர்;அஞ்சனை தோன்றலும் நின்றான். |
ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் - (பிணக்குவியல்களை)இழுத்துக் கொண்டு செல்கின்ற இரத்த வெள்ளத்தினிடையே உள்ள மணல் திட்டுகள்; இழுக்க - உள்ளே இழுப்பதனால்; தேர்த்துணை ஆழி அழுந்தினர் சென்றார் - தம் தேர்களின் சக்கரங்களும் புதையவும் அரிதின் சென்ற பஞ்ச சேனாபதிகள்; ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர் - ஆயிரக்கணக்கான அம்புகளால் (அனுமன் உடலை) மூடி மறைத்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான் - அஞ்சனா தேவியின் மகனாகிய அனுமனும் அம்புமாரியுள் அஞ்சாது நின்றான். (48) |