அறுசீர் ஆசிரியவிருத்தம்  

 5664.

வஞ்சமும்களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி,
நஞ்சினும்கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய
                                       நீரார்,
வெஞ் சின அரக்கர் ஐவர்; ஒருவனே!-
                     வெல்லப்பட்டார்
அஞ்சு எனும்புலன்கள் ஒத்தார்; அவனும், நல்
                    அறிவை ஒத்தான்.

     வஞ்சமும் களவும்வெஃகி - வஞ்சகத் தன்மையும் களவுத்
தொழிலையும் விரும்பி; வழி அலா வழி மேல் ஓடி - நநல்வழி அல்லாத
தீய வழியில் ஓடித் திரிந்து;
 நஞ்சினும் கொடியர் ஆகி - விடத்தை விடக்
கொடிய தன்மை உடையவர்களாகி;  நவை செயற்கு உரிய நீரார் -பிறர்க்குத் தீமை செய்வதையே தமக்குக் குணமாகக் கொண்டவர்களாய்;
வெல்லப்பட்டார் -
அனுமனால் வெல்லப்பட்டவரான; வெஞ்சின அரக்கர்
ஐவர் -
கடுங்கோபம் கொண்ட அரக்கராகிய பஞ்ச சேனாபதிகள்; அஞ்சு
எனும் புலன்கள் ஒத்தார் - 
ஐந்து புலன்களுக்கு ஒப்பராயினர்; ஒருவனே
அவனும் -
தனி வீரனாய் (ஐவரை வென்ற) அனுமனும்; நல் அறிவை
ஒத்தான் -
(புலன்களை வென்று) சிறக்கும் நல்ல ஞானத்தை
ஒத்தவனானான்.

     பஞ்சசேனாபதிகளுக்குத் தீய வழியில் செல்லும் ஐம்புலன்களும்,
அவர்களை வென்ற அனுமனுக்குப் புலன்களை வென்ற ஞானமும்
உவமைகளாக வந்தன. இது ஒரு தத்துவ உணர்ச்சி அமைந்த உவமை.
முன்னே (5615) ஒரு பாடலில் பஞ்ச சேனாபதியரை ஐம்பெரும் பூதங்களைநிகர்த்தவர் என்று குறிந்துள்ளார்.                      (64)