சேனாதிபதி ஐவர்அழிவினை இராவணனுக்கு அறிவித்தல்

5666.

'இறுக்குறும், இன்னே நம்மை, குரங்கு' என இரங்கி
                                     ஏங்கி,
மறுக்குறுகின்றநெஞ்சின் மாதரை வைது நோக்கி,
உறுக்குறும்சொல்லான், ஊழித் தீ என உலகம்
                                     ஏழும்
சுறுக்கொளநோக்குவான்தன் செவித் தொளை தீய,
                                    சொன்னார்.

     குரங்கு நம்மைஇன்னே இறுக்குறும் என - (குரங்கினால் விளையும்
அழிவுகளைக் கேள்வியுற்று) 'அந்தக் குரங்கு நம்மை இப்பொழுதே
கொன்றுவிடும்' என்று; ஏங்கி இரங்கி - ஏக்கமுற்று வருந்தி; மறுக்கு
உறுகின்ற நெஞ்சின் மாதரை -
கலக்கமுறும் மனத்தோடு நடுங்கிக் கொண்டு,
தன் அருகில் நிற்கின்ற மகளிரை; வைது நோக்கி - (இராவணன்) நிந்தித்துப்
பார்த்துக் கொண்டு; உறுக்கு உறுசொல்லான் - அதட்டும் கடுஞ் சொற்களால்;
ஊழித் தீ என உலகம் ஏழும் சுறு கொள - கற்பாந்த காலத்துத் தோன்றும்
பெருந்தீ என உலகங்கள் ஏழும் தீய்ந்து போம்படி; நோக்குவான் தன் -
பார்த்துக் கொண்டிருப்பவனாகிய இராவணனுடைய; செவித் தொளை -
இருபது காதுகளின் துவாரங்களும்; தீயச் சொன்னார் - தீய்ந்து போம்படி
(கர்ண கடூரமாக பஞ்ச சேனாபதிகள் இறந்த செய்தியைக்)கூறலானார்கள். (66)