உழைக் குலநோக்கினார்கள், உலந்தவர்க்கு உரிய மாதர், அழைந்து அழுகுரலின், வேலை அமலையின், அரவச் சேனை தழைத்து எழும்ஒலியின், நானாப் பல் இயம் துவைக்கும் தா இல் மழைக் குரல்இடியின், சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ;
உலந்தவர்க்குஉரிய மாதர் - (முன்னே நிகழ்ந்தபோரில்) இறந்த அரக்கர்களுக்கு உரிய மனைவியர்களாகிய; உழைக்குலம் நோக்கினார்கள் - மான் கூட்டம் போன்ற (மருண்ட) பார்வையை உடைய அரக்கியர்கள்; அழைத்து அழுகுரலின் - தமது கணவர்களை நினைத்து அழைத்து அழுகின்ற குரலினாலும்; வேலை அமலையின் - கடலின் ஒலியினாலும்; அரவச் சேனை தழைத்து எழும் ஒலியின் - ஆரவாரம் செய்கின்ற சேனைகள் திரண்டு செல்வதால் நிகழ்ந்த ஒலியினாலும்; நானா பல் இயல் துவைக்கும் - பலவகையான வாத்தியங்கள் ஒலிக்கின்ற; தா இல் மழைக்குரல் இடியின் - குற்றம் இல்லாத மேகத்தின் தொனியாகிய இடிபோன்ற பேரொலியாலும்; சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப - ஒருவர்க்கு ஒருவர் பேசிய வார்த்தைகள் பிறர்க்குக் கேட்காமல் அடங்கிவிடவும்....
'விழுங்க' எனஅடுத்த கவியோடு தொடரும் படை செல்லுங்கால் எழுந்த பேரொலி வருணிக்கப்பட்டது. (14)