5689. | அன்னதாம்அச் சொல் கேட்ட சாரதி, 'ஐய ! கேண்மோ ! இன்னதாம்என்னல் ஆமோ உலகியல் ? இகழல் அம்மா; மன்னனோடுஎதிர்ந்த வாலி குரங்கு என்றால், மற்றும் உண்டோ ? சொன்னதுதுணிவில் கொண்டு சேறி' என்று, உணரச் சொன்னான். |
அன்னது ஆம்அச்சொல் கேட்ட சாரதி -அத்தன்மைத்தான இழித்துக் கூறிய சொல்லைக் கேட்ட, தேர்ப்பாகன்; ஐய ! கேண்மோ - (அக்ககுமாரனைப் பார்த்து) 'ஐயனே ! நான் சொல்வதைக் கேட்பாயாக; உலகு இயல் இன்னது ஆம் என்னல் ஆமோ - உலகில் நடைபெறும் செயல்கள் இத்தன்மையானவை என்று துணிந்து கூறமுடியுமா ? (கூற முடியாது); இகழல் - குரங்குதானே என்று இகழ வேண்டாம்; மன்னனோடு எதிர்ந்த வாலி - நம் அரசனாகிய இராவணனோடு முன்வந்து எதிர்த்து நின்று வென்ற வாலி என்பவன்; குரங்கு என்றால் மற்றும் உண்டோ ? - ஒரு குரங்கே யாகும் என்றால் மேலும் சொல்வதற்கு இடம் உண்டோ ? சொன்னது, துணிவில் கொண்டு சேறி' - யான் சொன்னதை உறுதியாக மனத்தில் கொண்டு (இதனிடத்தில் வெற்றிபெற வேண்டுமே என்ற எண்ணத்துடன்) செல்வாயாக'; என்று உணரச் சொன்னான் - என்று அக்ககுமாரன் அறிந்து கொள்ளுமாறு கூறினான். இராவணன்வாலியின் வாலில் சிறைப்பட்டதை குறிப்பாகக் கூறியதும் குரங்கு ஏளனத்துக்கு உரியதல்ல என்று உணர்த்தியதும் சாரதியின் அறிவுச் சிறப்பைக் காட்டுகின்றது. (22) |