5699. | உற்றான்இந்திரசித்துக்கு இளையவன்; ஒரு நாளேபலர் உயிர் உண்ணக் கற்றானும் முகம்எதிர் வைத்தான்; அது கண்டார்விண்ணவர்; கசிவுற்றார்; 'எற்றாம் மாருதி நிலை ?' என்பார்; இனி 'இமையாவிழியினை இவை ஒன்றோ பெற்றாம்;நல்லது பெற்றாம்' என்றனர்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார். |
இந்திரசித்துக்கு இளையவன் உற்றான் - இந்திரசித்தனுக்குத் தம்பியாகிய அந்த அக்ககுமாரனும் (அனுமனுக்கு) எதிரே வந்தடைந்தான்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் - ஒரு நாளிலேயே பல லட்சக்கணக்கான வீரர் உயிர்களை அழிக்கப் பழகியவனான அனுமனும்; முகம் எதிர் வைத்தான் - அவனுக்கு எதிர்முகமாய் நின்றான்; அது கண்டார் விண்ணவர் - அந்நிலையைக் கண்ட தேவர்கள்; கசிவு உற்றார் - மனம் இரங்கியவர்களாய்; மாருதி நிலை எற்றாம் - (இனி) அனுமனுடைய நிலை யாது ஆகுமோ; என்பார் - என்று மனத்தில் துணுக்குக் கொண்டு கூறுபவர்களாய்; இனி - இப்பொழுது; இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம் - இமையாக்கண்களை உடைமையாகிற இந்த ஒரு சிறப்பைப் பெற்றிருக்கின்ற நாங்கள்; நல்லது பெற்றாம் -(இவ்விருவரும் பொருகின்ற போர் விநோதத்தைக் காணுமாறு) நன்மையைப் பெற்றவரானோம்; என்றனர் - என்று கூறுபவர்களாய்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் - (ஒருவரை விட்டு ஒருவர்) பிரியாமல் (அப்போரைக் காணும் பொருட்டு வானத்தில்) எதிர் எதிராகப் போய் நின்றார்கள். போரை இடையீடின்றிக் காணுதற்குக் கண் இமையாமல் இருத்தல் வாய்ப்பு ஆயிற்று ஆதலின் மகிழ்ச்சி விளைந்தது. (32) |