வாளாலே பொரல் உற்றான், இற்று அது மண்சேராமுனம், வயிரத் திண் தோளாலே பொரமுடுகிப் புக்கு, இடை தழுவிக்கோடலும், உடல் முற்றும், நீள் ஆர் அயில்என மயிர் தைத்திட, மணி நெடு வால்அவன் உடல் நிமிர்வுற்று மீளாவகை, புடைசுற்றிக்கொண்டது; பற்றிக்கொண்டன் மேலானான்.
வாளாலே பொரல்உற்றான் - வாள் கொண்டு போர்புரியத் தொடங்கிய அக்ககுமாரன்; அது இற்று மண் சேரா முனம் - அந்த வாள் ஒடிந்து தரையில் விழுவதற்கு முன்னம்; வயிரத்திண் தோளாலே பொர முடுகி - மிக்க வலிய தனது தோளினாலேயே போர் புரிய வேகமாக வந்து; இடை புக்கு தழுவிக் கோடலும் - அவ்விடம் புகுந்து அனுமனைத் தழுவிக் கொள்ள முயன்றபோது; உடல் முற்றும் - அக்ககுமாரனது உடல் முழுவதும்; நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட - நீட்சி பொருந்திய வேலாயுதம் போல (அனுமனது) உரோமங்கள் குத்தி உட்புக; மணி நெடு வால் - அனுமனுடைய அழகியநீண்டவால்; அவன் உடல் நிமிர் உற்று மீளாவகை - அந்த அக்ககுமாரனுடைய உடல் மேற்கிளம்பி மீளாதபடி; புடை சுற்றிக் கொண்டது - உடலின் எப்புறங்களிலும் சுற்றிப் பிணித்துக் கொண்டது; பற்றிக்கொண்டனன் - இவ்வாறு பற்றிக் கொண்ட அனுமன்; மேல் ஆனான் -(அவ்வரக்கனைக் கீழே தள்ளி அவன்) மேலே எழுந்து உட்கார்ந்துகொண்டான். (36)