5705.

நீத்து ஆய்ஓடின உதிரப் பெரு நதி
     நீராக,சிலை பாராக,

போய்த்தாழ் செறி தசை அரி சிந்தினபடி
     பொங்க,பொரும் உயிர் போகமுன்,
மீத் தாம்நிமிர் சுடர் வயிரக் கைகொடு
     பிடியா,விண்ணொடு மண் காண,
தேய்த்தான்-ஊழியின் உலகு ஏழ் தேயினும்,
     ஒரு தன்புகழ் இறை தேயாதான்.

     நீத்து ஆய் ஓடினஉதிரப் பெரு நதி நீராக - (அப்போது)
வெள்ளமாகப் பெருகிய இரத்தப்பெரு நதியே (அரைக்கும் போது விடும்)
நீராகவும்; பார் சிலை ஆக - பொருகளமே (பூமியே) அரைக்கும்
அம்மிக்கல்லாகவும்; போய்த் தாழ் செறி தசை - அத்தரையில் போய்
விழுந்த (அக்ககுமாரனது) நெருங்கிய தசையே; அரி சிந்தின படி பொங்க -
ஊறல் அரிசிகள் சிந்திக் கிடப்பனபோல மிகுந்து விளங்கவும்; பொரும் உயிர்
போகாமுன் -
(அரக்கனது உடற்பகுதியைக் குழவியாகக் கொண்டு) போர்
செய்கின்ற அரக்கன் உயிர் போகாமுன்னம்; மீத்தாம் நிமிர் - மேலாக
எழுந்து ஓங்கிய; சுடர் வயிரக்கை கொடு பிடியா - ஒளிதங்கிய உறுதியான
தன் இருகைகளைக் கொண்டு (குழவியின் இருபுறத்து) பிடித்து; விண்ணொடு
மண்ணும் காண -
மேலுலகத்தாரும் நில உலகத்தாரும் காணும்படி; ஊழியின்
-
யுக முடிவில்; உலகு ஏழ்தேயினும் - ஏழு உலகங்களும் அழிந்தாலும்; ஒரு
தன் புகழ் இறை தேயாதான் -
ஒப்பற்ற தன் புகழில் சிறிதும் குறையாது
விளங்கும் அனுமன்; தேய்த்தான் - அரைத்து உருவில்லாமல் சேறாக்கினான்.

     தேயாதான்,தேய்த்தான் என்பது முரண் தொடர் அழகு. அரி
சிந்தினபடி; அரைக்கும் போது, அதிர்ச்சியால் அம்மியில் உள்ள அரிசிகள்
சிந்துவன, போல, அரக்கன் உடலிலிருந்து தசைத்துண்டுகள் சிந்திப் புறங்களில்
விழுந்து கிடந்தன என்பதாம்.                                  (30)