எஞ்சிய படைகள்அஞ்சி ஓடி மறைதல் 5706. | புண் தாழ்குருதியின் வெள்ளத்து, உயிர் கொடு புக்கார் சிலர்; சிலர் பொதி பேயின் பண்டாரத்திடைஇட்டார் தம் உடல்; பட்டார்சிலர்; சிலர் பயம் உந்த, திண்டாடித் திசைஅறியா மறுகினர்; செற்றார்சிலர்; சிலர் செலவு அற்றார்; கண்டார் கண்டது ஓர் திசையே விசைகொடு கால்விட்டார்; படை கைவிட்டார். |
சிலர் புண்தாழ்குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் - (உயிர்எஞ்சிய அரக்கரில்) சிலர், புண்களிலிருந்து பெருகுகின்ற இரத்த வெள்ளத்தினுள் உயிரோடு புகுந்து ஒளிந்து கொண்டனர்; சிலர் பேயின் பொதிபண்டாரத்திடைத் தம் உடல் இட்டார் - மற்றும் சிலர், பேய்களால் சேர்த்துவைக்கப்பட்ட பிணங்கள் நிறைந்த குவியலினிடத்து (போய்ப்புகுந்து) தமது உடலை இட்டு மறைத்துக் கொண்டனர்; சிலர், பயம் உந்த பட்டார் - வேறு சில அரக்கர்க்ள அச்சம் முன் பிடித்துத்தள்ள இறந்து ஒழிந்தனர்; சிலர், திண்டாடித் திசை அறியாமறுகினர், செற்றார் - மற்றும் சிலர், அலைக்கல்பட்டுத் திக்குத் தெரியாமல் கலங்கினவராய் வலியொடுங்கினார்கள்; சிலர் செலவு அற்றார் - வேறு சிலர், எங்கும் செல்லும் வலிமை அற்றவர்களானார்கள்; சிலர் படைகைவிட்டார் - வேறு சிலர் தம் கையிலிருந்த ஆயுதங்களை நழுவவிட்டவர்களாய்; கண்டார் கண்டது ஓர் திசையே - அவரவர் எதிரே கண்ட கண்ட திசை நோக்கியே; விசை கொடு கால் விட்டார் - வேகமாக ஓட்டம் பிடித்தனர். புறம் கொடுத்துஓடியவர்களின் செயலுள் சில கூறப்பட்டன. கைவிட்டார் கால் விட்டார் என்பன மரபுச் சொற்கள். (39) |