5707.

மீன் ஆய்,வேலையை உற்றார் சிலர்; சிலர்
    
பசு ஆய்வழிதொறும் மேய்வுற்றார்;
ஊன் ஆர்பறவையின் வடிவு ஆனார் சிலர்;
     சிலர்நான்மறையவர் உரு ஆனார்;
மான் ஆர் கண்இள மடவார் ஆயினர்
     முன்னே, தம் குழல் வகிர்வுற்றார்
ஆனார் சிலர்;சிலர், 'ஐயா ! நின் சரண்'
     என்றார்;நின்றவர் 'அரி' என்றார்.

     சிலர் மீன் ஆய்வேலையை உற்றார் - சில அரக்கர்கள் மீன்
உருவம் கொண்டு கடலில் சேர்ந்தனர்; சிலர், பசு ஆய் வழிதொறும்
மேய்வுற்றார் -
சிலர் பசுவின் வடிவில் மாறி வழிகளில் எல்லாம்
மேய்வாராயினர்; சிலர் ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் - சில
அரக்கர்கள், மாமிசத்தைத்தின்னும் (கழுகு, காகம் முதலிய) பறவைகளின்
வடிவை உடையவரானார்கள்; சிலர் நான் மறையவர்
உரு ஆனார் - வேறு
சிலஅரக்கர்கள் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர் உருவை எடுத்துக்
கொண்டனர்; சிலர் - மற்றும் சில அரக்கர்கள்; மான் ஆர் கண் இள
மடவார் ஆயினர் -
மான்போன்ற கண்களை உடைய இளமகளிர் உருவைப்
பெற்றவராய்; தம் குழல் முன்னே வகிர்வு உற்றார் ஆனார் - தம்கூந்தலை முன்புறம் வகிடு எடுத்துக் கொண்டவர் ஆயினர்; சிலர், 'ஐயா,
நின்சரண் என்றனர் -
வேறுசிலர், 'ஐயனே ! யாம் உன் அடைக்கலம்
என்றார்கள்; நின்றவர் அரி என்றார் - மற்றுமுள்ளோர் அரி என்ற திருமால்
திருநாமத்தைக் கூறினர்.

     அனுமனுக்குஅஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில்
அரக்கர்கள் செய்த மாயச் செயல்கள் கூறப்பட்டன. அரி - குரங்கு என்றும்
பொருள் - குரங்கு என்றது அச்சத்தில் கூறியதாம் - அது திருமால் நாமமாகக்
கருதப்பட்டு உயிர் பெற்றார்.                                  (40)