இராவணன் மாளிகைசென்று இந்திரசித்து பேசுதல் 5723. | ஆய மாத்தானைதான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத் தீய வாள்நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின் 'ஏ' எனும்அளவில் வந்தான்; இராவணன் இருந்த, யாணர் வாயில் தோய்கோயில் புக்கான்;-அருவி சோர் வயிரக் கண்ணான். |
ஆய - அவ்வாறே(பன்னீராயிரம் என்னும் தொகையினதாய்); மாதானைதான் வந்து அண்மியது அண்ம - குதிரைப்படை தானும் வந்து அங்குக் கூடியது. அவ்வாறு அப்படைகள் பலவும் வந்து கூடவும்; ஆண்மை தீயவாள் நிருதர் வேந்தர் - வீரம் நிறைந்த கொடிய வாள் ஏந்திய அரக்கர் அரசர்கள்; சேர்ந்தவர் சேர - திரண்டு தன் அருகில் வந்து சேரவும்; அருவி சோர் வயிரக்கண்ணான் - அருவிபோல நீர் ஒழுகுகின்ற பகைமை கொண்ட கண்களை உடைய இந்திரசித்து; 'ஏ' எனும் அளவில் - விரைவிலே; தேரில் வந்தான் - தேரில் ஏறி வந்து; இராவணன் இருந்த - இராவணன் வசித்திருந்த; யாணர் வாயில் தோய் கோயில் புக்கான் - அழகிய வாயில் பொருந்திய அரண்மனையினுள் புகுந்தான். முன் பாடலில்வேற்படை முதலிய ஐந்தினைக் கூறி, இதனுள் குதிரைப்படை தனித்துக் கூறப்பட்டது. அனைத்துப் படைகளும் தன்னை வந்து நெருங்கியதும், இந்திரசித்து, இராவணனின் அரண்மனைக்குச் சென்றான். யாணர் - அழகு; தோய் - பொருந்திய. (7) |