5727. | 'திக்கயவலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணன்கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்; "அக்கனைக்கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காண்டி; புக்கு இனிவென்றும்" என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ ? |
திக்கய வலியும்- எட்டுத்திக்கு யானைகளின் வலிமையையும்; மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணான் கயிலையோடும் - முன்னொரு காலத்தில் முப்புரத்தையும் எரியும்படி அழித்திட்ட சிவபிரானது கைலை மலையையும்; உலகு ஒரு மூன்றும் வென்றாய் - மூன்று உலகங்களையும் வென்றவனாகிய நீ (இப்போது); அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை - அக்ககுமாரனைக் கொன்று (தான் உயிரோடு) நின்ற இந்தக் குரங்கை; ஆற்றல் காண்டி - அதன் ஆற்றல் காண்பிக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறாய் (விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்); இனிப்புக்கு வென்றும் என்றால் - இவ்வளவு அழிவுக்குப் பின் நாம் போர்க்களம் சென்று அதனை வெல்வோம் என்று சொன்னால்; புலம்பு அன்றி - அது வீண்பிதற்றலே அல்லாமல்; புலமைத்து ஆமோ ? - அறிவுடைய செயலாகுமோ (ஆகாது என்றபடி). ஆடவிட்டு நாடகம்பார்ப்பது போல செய்து விட்டாய். இனி அக்குரங்கை நாம் வென்றாலும் நமக்குப் புகழ் இல்லை என்பது கருத்து. (11) |