5755. | ஆழிஅம்தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செங் கண் சூழி வெங் கோபமாவும், துவன்றிய நிருதர் சேனை, ஊழி வெங்கடலின் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற பாழி மா மேரு ஒத்தான்-வீரத்தின் பன்மை தீர்ப்பான். |
ஆழி அம் தேரும்- சக்கரங்களோடு கூடிய அழகிய தேரும்; மாவும், அரக்கரும் - குதிரைகளும், காலாட்படையினராகிய அரக்கர்களும்; உருக்கும் செங்கண் - கோபித்து நோக்குகின்ற; சூழி வெங்கோபமாவும் - சிவந்த கண்களை உடையனவும் முகபடாத்தை அணிந்தனவும் கொடிய சினத்தை உடையனவுமான யானைகளும்; துவன்றிய நிருதர் சேனை - கூடி நிறைந்த அரக்கர் படை; ஊழிவெங்கடலின் சுற்ற - யுகமுடிவின் காலத்தில் பொங்கி எழும் கடலைப் போன்று தன்னைச் சூழ்ந்து வர; வீரத்தின் பன்மை தீர்ப்பான் - வீரத்தின் சிறப்பு பலரால் பங்கிட்டுக் கொள்ளப் பெறாது, தன் ஒருவனுக்கே உரிமையாகப் பெற்ற மேகநாதன்; தனி நடுவண் நின்ற - ஒன்றேயாகத் தனித்து அவ் வெள்ளத்தின் இடையே விளங்கி நின்ற; ஒரு பாழிமா மேரு - ஒப்பற்ற பருத்த மகா மேரு என்னும் மலையை; ஒத்தான் - ஒத்து விளங்கினான். அரக்கர்நால்வகைப் படையும் கடலாகவும், கடல் நடுவே நின்ற மேருமலை இந்திரசித்தாகவும் கூறப்பட்டது. வீரத்தின் பன்மை தீர்ப்பான் என்பது பிறரது வீரத்தை வென்றொழிப்பவன் என்று பொருள்படும். (39) |