இந்திரசித்தைநோக்கிய அனுமன் சிந்தனை

கலிவிருத்தம்

5765.

ஈண்டு இவைநிகழ்வுழி, இரவி தேர் எனத்
தூண்டுறுதேரின்மேல் தோன்றும் தோன்றலை,
மூண்டு முப்புரம்சுட முடுகும் ஈசனின்,
ஆண் தகை வனைகழல் அனுமன், நோக்கினான்.

     ஈண்டு இவைநிகழ்வுழி - இவ்விடத்தில் இச்செயல்கள்
நடக்கும்போது; இரவி தேர் என - சூரியனும் அவனுடைய தேரும் போல;
தூண்டு உறும் தேரின் மேல் தோன்றும் தோன்றலை மூண்டு -
செலுத்தப்பட்ட தேரின் மீது விளங்கும் இராவணன் புதல்வனான இந்திரசித்தை
சீற்றம் மேற்கொண்டு; முப்புரம் சுட முடுகும் ஈசனின் - திரிபுரங்களை
எரித்தற்கு விரைந்து செல்லும் சிவபெருமானைப் போன்ற; ஆண்தகை
வனைகழல் அனுமன் நோக்கினான் -
ஆண்மைக் குணம் மிக்க பூண்ட
வீரக்கழலை உடைய அனுமன் பார்த்தான்.

     இரவி, தேர்உம்மைத்தொகை. அனுமனுக்குச் சிவபிரான் உவமை. அவன்
சிவபிரான் அம்சமாக அவதரித்தவன் என்பதைக் குறிக்க வந்தது.      (49)