கலிநிலைத் துறை

5766.

'வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும்
                               மெய்ம்மை
அன்றே முடுகிக்கடிது எய்த அழைத்தது அம்மா !
ஒன்றே, இனிவெல்லுதல் தோற்றல்; அடுப்பது
                               உள்ளது
இன்றே சமையும்;இவன் இந்திரசித்து !' என்பான்.

     இதன்முன் சிலவீரரை வென்றேன் என்னும் மெய்ம்மை அன்றே -
யான்,இதற்கு முன் சில அரக்க வீரரை போரில் வென்றேன் என்னும் உண்மை
அல்லவா; முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா - மிக்க விரைவாக
வருமாறு (இவனை) இங்குக் கூப்பிட்டது; இனி வெல்லுதல் தோற்றல் ஒன்றே
அடுப்பது உள்ளது -
யான், இனி வெற்றி பெறுவது அல்லது தோற்பது
என்பவற்றுள்  ஒன்றே அடையக்கூடியதாகும்; இன்றே சமையும் -
(அவ்விரண்டில் ஒன்று) இன்றைக்கே அமையும்; இவன் இந்திரசித்து
என்பான் -
இவன் இந்திரசித்து என்பவனே ஆவான்.

     இந்திரசித்தின்வீரத்தைப் பற்றிக் கேள்வியுற்றதனாலும், பிராட்டியை
இலங்கையில் தேடியபோது இவனை மாளிகையில் கண்டதனாலும், வருபவன்
இந்திரசித்தே என்று அனுமன் தெளிந்தான்.                      (50)