5792. | உய்த்தவெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப, கைத்தசிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்; வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி, அத் தடம் பெருந்தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான். |
உய்த்த வெம்சரம் - அவ்வாறு இந்திரசித்து செலுத்திய கொடிய அம்புகள்; உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப - தனது மார்பிலும் கைகளிலும் அழுந்த; மாருதி - அனுமன்; கைத்த சிந்தையன் நனிதவகனன்றான் - வெறுத்த மனத்தினனாய், மிகவும் கோபம் மேற் கொண்டவனாய்; வித்தகன் சிலை விடுகணை விசையினும் கடுகி - ஞானவடிவனான இராமபிரான் வில்லில் தூண்டும் அம்பின் வேகத்தினும் அதிக வேகமாகச் சென்று; அத்தடம் தேரொடும் எடுத்து - அந்த மிகப் பெரிய தேருடனே (இந்திரசித்தைத்) தூக்கி; எறிந்து ஆர்த்தான் - மேலே வீசி எறிந்து ஆரவாரஞ் செய்தான். அனுமன்,இந்திரசித்தைத் தேரோடு எடுத்து எறியச் செல்லும் வேகத்துக்கு, இராமபிரானது அம்பின் வேகம் உவமை கூறப்பட்டது. வித்தகன் - மேலோன். (இராமபிரான்) (76) |