5833.

அவ் உரை,தூதரும், ஆணையால், வரும்
தெவ் உரைநீக்கினான் அறியச் செப்பினார்;
இவ் உரைநிகழ்வுழி, இருந்த சீதையாம்
வெவ் உரைநீங்கினாள் நிலை விளம்புவாம்;

     தூதரும் - தூதுவர்களும்;அவ் உரை - அந்தச் சொல்லை;
ஆணையால் -
இராவணனது கட்டளைப்படி; வரும் - தம் எதிரே
அனுமனைப் பற்றிக் கொண்டு வரும்; தெவ் உரை நீக்கினான் அறிய
செப்பினார் -
பகைவர் என்ற சொல்லையே நீக்கிய இந்திரசித்து தெரிந்து
கொள்ளும்படிக் கூறினார்கள்; இவ் உரை நிகழ்வுழி - இந்த வார்த்தை
எங்கும் பரவிய போது; இருந்த சீதையாம் - அசோகவனத்தில் காவலில்
இருந்த சீதையாகிய; வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் - கொடியபழிச் சொல்லின் நீங்கியவளது நிலையைக் கூறுவோம்.

     இது கவிக்கூற்று.தெவ் உரை நீக்கினான்; பகைவர்களே இல்லாதபடி
செய்தவன் என்பது கருத்து, வெவ் உரை நீங்குதலாவது பழி நாணித் தகை
சான்ற சொற்காத்தலாகும்.                                     (29)