இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டவாறு அனுமன் செல்லுதல் 5811. | வடியுடைக்கனல் படை வயவர், மால் கரி, கொடியுடைத்தேர், பரி கொண்டு வீசலின், இடி படச்சிதைந்த மால் வரையின், இல் எலாம் பொடிபடக்கிடந்தன கண்டு, போயினான். |
வடி உடை கனல்படை வயவர் - கூர்மை பொருந்தியநெருப்பைப் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்ட போர் வீரர்களையும்; மால்கரி கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் - பெரிய யானை, கொடிகட்டிய தேர், குதிரை ஆகியவற்றை (தான்) கையில் எடுத்து வீசி எறிந்ததனால்; இடிபட சிதைந்த மால் வரையின் - இடி விழுதலால் சிதைவுபட்ட பெரிய மலைகள் போல; பொடி பட கிடந்தன இல் எலாம் - பொடிப் பொடியாக நொறுங்கிக் கிடந்தனவான இலங்கை நகரத்து வீடுகளை எல்லாம்; கண்டு - (மகிழ்ச்சியோடு) பார்த்துக் கொண்டே; போயினான் - (அனுமன் அந்நகரத்து வீதிகளின் வழியாய்ச்) சென்றான். அனுமன் இலங்கைநகரத்து மாளிகைகளின் இடிபாடுகளைப் பார்த்துக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிக்காட்டாது வீதி வழியே சென்றான் என்பது கருத்து. (7) |