அனுமனைக் கண்டோர்செயல்

 5812.

முயிறுஅலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு
                                    தோள்
கயிறுஅலைப்புண்டது கண்டும், காண்கிலாது,
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்துஇரியலின், மயங்கினார் பலர்.

     முயிறு அலைத்து எழுமுது மரத்தின் - எறும்பினங்களால்
சூழப்பெற்று வளர்ந்த ஒரு பழைய மரத்தைப் போல; மொய்ம்பு தோள் -
அனுமனது வலிய தோள்களை; கயிறு அலைப் புண்டது கண்டும் -
நாகபாசம் கட்டி வருத்தியிருப்பதைப் பார்த்தும்; காண்கிலாது - (பயத்தினால்)
பார்க்காமல்; ஏழையர் வயிறு அலைத்து இரியலின் - பேதையர்களான
அரக்கிமார்கள் (குரங்கு இங்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி) வயிற்றைப்
பிசைந்து கொண்டு ஓடுதலின்; எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர்
பலர்-
கோரைப் பற்கள் அச்சத்தால் நடுங்கி மேற்கிளம்பும் உதட்டை உடைய
அரக்கர் பலர்; மயங்கினார் - (இக்குரங்கு என்ன தீமை செய்யத்
தொடங்கியதோ என்று) திகைப்புற்றார்கள்.

     முயிறு - ஒருவகைச்செவ்வெறும்பு. இது நாகபாசத்துக்கும் முதுமரம்,
அனுமன் தோளுக்கும் உவமைகள்.                              (8)