அனுமனைக் கண்டோர்செயல் 5812. | முயிறுஅலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு தோள் கயிறுஅலைப்புண்டது கண்டும், காண்கிலாது, எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் வயிறு அலைத்துஇரியலின், மயங்கினார் பலர். |
முயிறு அலைத்து எழுமுது மரத்தின் - எறும்பினங்களால் சூழப்பெற்று வளர்ந்த ஒரு பழைய மரத்தைப் போல; மொய்ம்பு தோள் - அனுமனது வலிய தோள்களை; கயிறு அலைப் புண்டது கண்டும் - நாகபாசம் கட்டி வருத்தியிருப்பதைப் பார்த்தும்; காண்கிலாது - (பயத்தினால்) பார்க்காமல்; ஏழையர் வயிறு அலைத்து இரியலின் - பேதையர்களான அரக்கிமார்கள் (குரங்கு இங்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி) வயிற்றைப் பிசைந்து கொண்டு ஓடுதலின்; எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் பலர்- கோரைப் பற்கள் அச்சத்தால் நடுங்கி மேற்கிளம்பும் உதட்டை உடைய அரக்கர் பலர்; மயங்கினார் - (இக்குரங்கு என்ன தீமை செய்யத் தொடங்கியதோ என்று) திகைப்புற்றார்கள். முயிறு - ஒருவகைச்செவ்வெறும்பு. இது நாகபாசத்துக்கும் முதுமரம், அனுமன் தோளுக்கும் உவமைகள். (8) |