5828.

'ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும்
நீதியும் மனக்கொள நிறுவி, நின்றவும்
பாதியின்மேல்செல நூறி, பைப்பையப்
போதலே கருமம்'என்று, அனுமன் போயினான்.

     ஆதலால் -'ஆகையால்; அரக்கனை எய்தி - அரக்கனாகிய
இராவணனைச் சந்தித்து; ஆற்றலும் நீதியும் மனம்  கொள நிறுவி -
இராமபிரானுடைய வலிமையையும், நெறி முறையையும் அவன் உள்ளத்தில்
பதியும்படிச் செய்து; நின்றவும் - (அதன் பின்பும் இசையாது போனால்)
(இதுவரை என்னால் கொல்லப்பட்டவை போக) மீதியாக உள்ள அரக்கர்
சேனைகளில்; பாதியின் மேல் செல நூறி - பாதிக்கு மேலாக அழித்துவிட்டு;
பைபைய போதலே கருமம் -
(அவசரப் படாமல்) மெதுவாகப் போவதே
நான் செய்யத்தக்க காரியமாகும்; என்று - என்று எண்ணி; அனுமன்
போயினான் -
அனுமன் அடங்கி, அந்த அரக்கருடன் சென்றான்.

     நிறுவுதல், நூறுதல், போதல் இவைகளைத் தனது கடமையாகக்
கொண்டான் அனுமன். ஒன்றன் பின் ஒன்றாக இவைகளைச் செய்வது என்ற
முடிவுடன், அடக்கமாக அனுமன் அரக்கருடன் சென்றான் என்க. நூறுதல் -
அழித்தல்.                                                (24)