5860. | 'உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம்' என்று ஒழிந்தேன்; பிறங்கு பொன்மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்; திறங்கள் என்பல சிந்திப்பது ? இவன் தலை சிதறி, அறம் கொள்கொம்பினை மீட்டு, உடன் அகல்வென்' என்று அமைந்தான். |
உறங்குகின்றபோது உயிர் உண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் - தூங்கும்போது ஒருவன் உயிரைப் போக்குதல் பழிக்கு இடமாகும், என்று எண்ணி, (முன்பு இவனைக் கொல்லாது) விட்டிட்டேன்; பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் - (இப்போது இவன்) விளங்கும் பொன்னாலும் மணியாலும் ஆன சிம்மாசனத்தில் வீற்றிருக்கவும் காணப்பெற்றேன்; பல திறங்கள் சிந்திப்பது என் ? - (இனி) பலவகையாக ஆலோசிப்பதற்கு என்ன இருக்கிறது ? இவன் தலை சிதறி - (இப்பொழுதே) இவன் தலைகளைச் சிதறி விழச் செய்து; அறம் கொள் கொம்பினை மீட்டு - அறத்திற்கு ஒரு பற்றுக்கோடு போல விளங்கும் பூங்கொம்பு போன்றவளான பிராட்டியை சிறையினின்று மீட்டுக் கொண்டு; உடன் அகல்வென் என்று அமைந்தான் - விரைவில் மீண்டு செல்வேன்' என்று அனுமன் உறுதி செய்து கொண்டான். அனுமனின் உறுதிகூறப்பட்டது. கொம்பு; உவமை ஆகுபெயர். (56) |