5869.

'ஆதலான், அமர்த்தொழில் அழகிற்று அன்று; அருந்
தூதன் ஆம்தன்மையே தூய்து' என்று, உன்னினான்;
வேத நாயகன்தனித் துணைவன், வென்றி சால்
ஏதில் வாள்அரக்கனது இருக்கை எய்தினான்.

     ஆதலான் -மேற்கூறிய காரணங்களால்;அமர் தொழில் அழகிற்று
அன்று -
(இப்போது) போர் செய்தல் அழகுடையதன்று; அருந்தூதனாம்
தன்மையே தூய்து -
சிறப்புடைய தூதன் என்ற நிலையை மேற்கொள்ளுதலே
நன்மை தரத்தக்கது; என்று உன்னினான் - என்று எண்ணியவனாகி; வேதம்
நாயகன் தனி துணைவன் -
வேதங்களுக்குத் தலைவனான இராம பிரானுக்கு
ஒப்பற்ற உதவி செய்பவனாகிய அனுமான்; வென்றிசால் - வெற்றிமிக்க; ஏதில்
வாள் அரக்கனது இருக்கை எய்தினான் -
பகைவனான வாள் ஏந்திய
இராவணனுடைய கொலு வீற்றிருக்கும் இடத்தை நெருங்கினான்.

     மேல் நிகழவேண்டியவற்றை எண்ணி, தானே தன்னை இராவணன்பால்
இராமன் அனுப்பி தூதன் எனக் காட்டிக் கொள்வதே தூயது எனத்
துணிந்தான் அனுமன் என்க.                                (65)