5873.

அன்ன ஓர்வெகுளியன், அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர்துணுக்கம் சுற்றுற,
'என் இவண் வரவு? நீ யாரை ?' என்று, அவன்
தன்மையைவினாயினான்-கூற்றின்  தன்மையான்.

     கூற்றின்தன்மையான் - யமன் போன்ற கொடுந்தன்மை
உடையவனான இராவணன்; அன்ன ஓர் வெகுளியன் - அத்தன்மைத்தான
ஒரு பெருங்கோபம் உடையவனாய்; அமரர் ஆதியர் துன்னிய துன்னலர் -
தேவர்கள் முதலாக உள்ள தன்னைச் சூழ்ந்திருந்த பகைவர்களை; துணுக்கம்
சுற்றுற -
அச்சம் சூழும்படி,  (அனுமனை நோக்கி); என் இவண் வரவு ? நீ
யாரை ? என்று -
நீ இங்கு வந்த காரணம் என்ன ? நீ யார் ? என்று;
அவன் தன்மையை வினாயினான்
- அந்த அனுமனுடைய நிலைமையை
வினவலானான்.

     இராவணன் அனுமனைநோக்கி 'என் இவண் வரவு ? நீ யாரை ?'
என்று கேட்கத் தொடங்கும் வார்த்தை, அவனைச் சூழ்ந்திருந்த தேவர்களாகிய
பகைவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வண்ணம் இருந்தது என்க.
துன்னலர் - பகைவர்.                                     (69)