5886.

'அன்னவற்குஅடிமை செய்வேன்; நாமமும் அனுமன்
                            என்பேன்;
நன்னுதல்தன்னைத்தேடி நாற் பெருந் திசையும்
                            போந்த
மன்னரில்,தென்பால் வந்த தானைக்கு மன்னன்,
                            வாலி-
தன் மகன்,அவன்தன் தூதன் வந்தனென்,
                            தனியேன்' என்றான்.

     அன்னவற்கு அடிமைசெய்வேன் - சக்கரவர்த்தித்திருமகனாக
அவதரித்த அந்த இராமபிரானுக்கு அடிமைத் தொழில் செய்பவன்யான்;
நாமமும் அனுமன் என்பேன் - பெயரும் அனுமன் என்று
சொல்லப்படுவேன்; நல் நுதல் தன்னைத் தேடி - நல்ல நெற்றியை உடைய
சீதாபிராட்டியைத் தேடிக் கொண்டு; நால் பெரும் திசையும் போந்த
மன்னரில் -
நான்கு பெருந் திசைகளிலும் சென்ற தலைவர்களுள்; தென்
பால்வந்த தானைக்கு மன்னன் வாலி தன் மகன் -
தென் திசையில் வந்த
சேனைக்குத் தலைவன் வாலியின் மகனாகிய அங்கதன்; அவன் தன் தூதன்
தனியேன் வந்தனென் என்றான் -
அவனது தூதனாய் நான் ஒருவன் இங்கு
வந்தேன் என்று அனுமன் கூறினான்.

     'அன்னவற்கு அடிமைசெய்வேன்; நாமும் அனுமன் என்பேன்; வாலி
தன் மகன் தூதன் வந்தனன்' என்று சொற் சுருக்கமாகக் கூறுதல் மூலம்,
அனுமன், தன்னையும், தான் வந்த காரியத்தையும் தெரிவித்துக் கொண்டு
விட்டான்.                                                 (82)