இராவணன்,வாலியின் நலன் உசாவலும் அனுமன் விடையும் 5888. | 'அஞ்சலை,அரக்க ! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே, வெஞ் சின வாலி;மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே; அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித் துஞ்சினன்;எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல்' என்றான். |
அரக்க ! அஞ்சலை- இராவணனே ! பயப்படாதே; வெம்சின வாலி பார்விட்டு அந்தரம் அடைந்தான் மீளான் - கொடிய கோபத்தினனாய வாலியானவன் பூமியை விட்டு விண்ணுலகம் சேர்ந்தான் இனித்திரும்பி வரமாட்டான்; அன்றே வாலும் போய் விளிந்தது - அன்றைக்கே அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது; அஞ்சன மேனியான் தன் அடு கணை ஒன்றால் - மை போன்ற கருநிறம் உடைய இராமபிரானது பகையை அழிக்கவல்ல அம்பு ஒன்றினால்; மாழ்கி துஞ்சினன் - வருந்தி இறந்தான்; எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் - (இப்போது) எங்களுக்கு அரசன் சூரியகுமாரனான சுக்கிரீவன் என்று கூறினான். (அனுமன்); அன்று, ஏ - அசைநிலைகள். வாலியின் மரணத்தைக் கூறுதலின் மூலம், இராமபிரானது வில்லாற்றலையும் இராவணனுக்கு உணர்த்தி விட்டான் அனுமன் இதில், எள்ளல் சுவையும் நகைச்சுவையும் அமைந்துள்ளன. (84) |