'ஆயவன் தன்னொடு, ஆண்டு, திங்கள் ஓர் நான்கும் வைகி, மேய வெஞ் சேனைசூழ வீற்று இனிது இருந்த வீரன், "போயினிர் நாடும்" என்ன, போந்தனம், புகுந்தது ஈது' என்று, ஏயவன் தூதன்சொன்னான். இராவணன் இதனைச் சொல்வான்:
ஆயவன் தன்னொடுஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி - அந்தச்சுக்கிரீவனுடனே அந்த ருசிய முகமலையில் மழைக்காலமாகிய நான்கு மாதங்கள் தங்கியிருந்து; மேய வெம் சேனை சூழ இனிது வீற்றிருந்த - வந்து கூடிய விரும்பத் தக்க வானர சேனைகள் தன்னைச் சுற்றிலும் நிற்க அவற்றின் நடுவில் இனிமையாக வீற்றிருந்த; வீரன் - மகாவீரனான இராமபிரான்; இனி போய் நாடும் என்ன - நீங்கள் இனி சென்று சீதையைத் தேடுங்கள் என்று கட்டளையிட; போந்தனம் - நாங்கள் தேடி வந்தோம்; புகுந்தது ஈது என்று - நடந்த காரியம் இது என்று; ஏயவன் தூதன் சொன்னான் - இராமபிரானால் ஏவப்பட்ட தூதுவனாகிய அனுமன் சொன்னான்; இராவணன் இதனை சொன்னான் - அதனைக் கேட்ட இராவணன் இந்த வார்த்தையைச் சொல்லலானான்.
இராமபிரான் தூதுஅனுப்பிய வரலாறு சுருக்கிக் கூறப்பட்டது. (87)