அரக்கர் அயன் படைநீக்கி அனுமன் வாலில் தீக் கொளுவுதல்

5922.

'ஆய காலத்து, அயன் படையோடு இருப்ப, ஆகாது
                              அனல் இடுதல்;
தூய பாசம் எனப்பலவும் கொணர்ந்து பிணிமின்
                              தோள்' என்னா,
மேய தெய்வப்படைக்கலத்தை மீட்டான், அமரர்
                              போர் வென்றான்;
'ஏ'எனாமுன், இடைபுக்கு, தொடை வன்கயிற்றால்
                              பிணித்து ஈர்த்தார்.

     ஆய காலத்துஅமரர் போர் வென்றான் - இவ்வாறு நிகழ்ந்த
சமயத்தில், தேவர்களைப் போரில் வென்ற இந்திரசித்து; அயன் படையோடு
இருப்ப அனல் இடுதல் ஆகாது -
வானரம், பிரம்மாத்திரப் பிணிப்புடன்
இருக்கும் போது, தீயிட்டு, அதனை எரித்தல் கூடாது, (அதனால்); தூய பாசம்
என பலவும் கொணர்ந்து தோள் பிணிமின் -
சிறந்த கயிறுகள் என்று
சொல்லும் பலவற்றையும் கொண்டு வந்து, இதன் தோள்களை இறுகக்
கட்டுங்கள்; என்னா மேய தெய்வப் படைக் கலத்தை மீட்டான் - என்று
(அரக்கர்களிடம் சொல்லி) அனுமன் மீது, பாம்பு வடிவாய்ப் பொருந்தியிருந்த
தெய்வத்தைன்மையுள்ள பிரமாத்திரத்தைத் தோள்களினின்று விடுவித்தான்;
எனா முன் -
(அக்கட்டளைப்படியே) அரக்கர்கள் ஏய் என்று ஒரு முறை

சொல்லும் காலஅளவுக்குள்; இடைபுக்கு தொடைவன் கயிற்றால் -
அனுமனிடம் வந்து, ஒன்றோடு ஒன்று இணைத்த கயிறுகளால்; பிணித்து
ஈர்த்தார் -
அனுமனைக் கட்டி இழுக்கலானார்கள்.

     பிணி வீட்டுப்படலத்திற்கு உயிர் நிலையாக அமைந்த இந்தப் பாடலால்
பிரம்மாத்திரத்தின் தெய்வத் தூய்மையும் உணர்த்தப்பட்டது.          (118)